நான் கடந்த சில வருடங்களாக குறிப்பு எழுதுவதில் (journaling) மிகவும் கவனம் செலுத்தி வருகிறேன். என்னில் இரண்டறக் கலந்துவிட்ட இந்த உன்னதமான பழக்கத்தினால் நான் அடையப் பெற்ற சில நன்மைகளை பகிர்ந்துகொண்டு உங்களையும் குறிப்பு எலுத உற்சாகப் படுத்துவதே இப்பதிவின் நோக்கமாகும்.

ஒவ்வொரு நாளும் இரு முறை குறிப்பெழுதுவது என் வழமை. அதிகாலை 4 மணியளவில் துயிலெழுந்து காலைத் தொழுகையை நிறைவேற்றி விட்டு 30 நிமிடங்கள் jogging செய்வது வழக்கம். இது அன்றைய நாளை உற்சாகமாக ஆரம்பிக்க தேவையான சுறுப்பை தருகின்றது. வீடு திரும்பியதும் என்னுடைய வீட்டு அலுவலகத்தில் (home office) அமர்து கண்களை மூடி சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு (silence sitting) குறிப்பெழுத ஆரம்பிப்பேன்.

குறிப்பு எழுதும் போது இப்படித்தான் எழுத வேண்டும், இவற்றைப் பற்றி தான் எழுத வேண்டும் அல்லது இவ்வாறுதான் எழுத வேண்டும் என்று வரையறைகள் எதுவும் கிடையாது. எனக்கு தோன்றுகின்ற ஆக்கதிரனான, ஆரோகியமான விடயங்களை எழுதுவேன். அல்லது என்னில் நான் உண்டாக்க விரும்பும் புதிய நற்பண்புகளைப் பற்றி எழுதுவேன். நான் என்னென்ன விஷயங்களில் கடந்த தினங்களில் ஈடுபட்டேனோ அல்லது சந்தித்தேனோ அனைத்தையும் எழுதுவேன். மேலும் அன்றைய நாளில் நான் என்ன செய்ய விரும்புகிறேன், எனென்ன இலக்குகலை அடைய வேண்டியுள்ளேன், எனென்ன பண்புகளை ஒழுக்கத்துடன் ஒழுக வேண்டியுள்ளேன் என்று அன்றைய நாளின் திட்டங்கள் அனைத்தையும் எழுதுவேன்.

இது ஒரு சிறந்த சுய-பிரதிபலிப்பு (self-reflection) முறை என்பதால் எம்மை அறியாமலே அதிகமான நேரம் இதில் கழிந்து போகக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆதலால் குறிப்பு எழுத முன்பே – 30 நிமிடத்திகுறிய கடிகார அலாரத்தை தயார் நிலையில் வைத்துக் கொள்வேன்.

குறிப்பிட நாளின் இரண்டாவது குறிப்பை வழக்கமாக உறங்க முன் எழுதுவேன். அதிகமான சந்தர்பங்களில் இதனை என் கையடக்க தொலைபேசியிலே எழுதுகிறேன். இது சார்பளவில் மிகவும் குறுகியதாக இருக்கும். அன்றைய நாளை மிகச் சிறந்த ஒரு நாளாக அமைத்துக் கொள்ள உதவி செய்த மனிதர்கள் மற்றும் இறைவன் எனக்கருளிய உதவிகள், சந்தர்ப்பங்கள், பொருட் செல்வங்கள் என எல்லாவற்றிகும் நான் செலுத்தும் கிருதக்ஞதையாக/நன்றியாக (gratitude) இது அமையும்.

நீங்களும் ஒரு நாளைக்கு இரண்டு தடவை குறிப்பெழுத வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. உங்கள் வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப நீங்களே இதனை திட்டமிட்டுக் கொள்ளலாம். இவ்வாறு எழுவதனால் ஏற்பட்டக் கூடிய ஏழு முக்கியமான நன்மைகளை இனி பார்ப்போம்.

  1. கடந்த நிகழ்வுகளை சற்று ஆராய்ந்து பார்த்தல்

    சிறிது நேரம் கடந்து சில நாட்களில் உங்களுக்கு நடந்த நிகழ்வுகளை பற்றி நினைத்து பாருங்கள். அவற்றிலிருந்து உங்களால் என்னென்ன கற்றுக்கொள்ள இயலும் என்பதனை சிந்தித்து பாருங்கள். ஏனெனில் உங்களின் எதிர்கால செயல்கள் அனைத்தும் உங்களின் கடந்த காலத்தின் புரிதலுக்கேற்ப வலுமை அடையும். குறிப்பெடுபதினால் நீங்கள் உங்களின் அனுபவங்களை சரியாக எதிர்காலத்தில் பயன்படுத்த உதவும்.

  2. எண்ணங்கள் தெளிவடைதல்

    குறிப்பு எழுதுவதினால் உங்களின் எண்ணங்கள் மிகவும் சீராகவும் தெளிவடையவும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் குழப்பமாக உள்ள சமயங்களில் இவ்வாறு எழுதும்போது அந்த குழப்பங்கள் நீங்கி அவற்றில் அர்த்தங்கள் தெளிவாக புரியக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும். மேலும் நீங்கள், உங்களுக்காக மட்டுமே எழுதுவதால், உங்களின் தனிப்பட்ட விடயங்களில் மற்றவர்களின் விமர்சனகள் பற்றி சிந்திக்காமல் முற்றிலும் கவனம் செலுத்த உதவும்.

  3. சூழ்நிலைகளை புரிந்து கொள்ளுதல்

    இன்றைய மிக வேகமான காலகட்டத்தில் நாம் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தின் அர்த்தத்தை புரிந்துகொள்ள தவற விடுகிறோம். இவ்வாறு தினமும் குறிப்பு எடுப்பதினால் உங்களின் வாழ்க்கைக் குறிக்கோள்களை நோக்கிய பயணத்தை சீராக கொண்டு செல்ல இயலும். ஒவ்வொரு நாளும் சற்று நேரம் உங்களின் தினசரி நிகழ்வுகள் எவ்வாறு உங்களின் நீண்ட கால குறிக்கோள்களை அடைய உதவுகின்றன என்பதனை சித்திப்பது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் ஒரு சிறந்த பயிற்சியாகும்.

  4. உணர்சிகளை கவனித்தல்

    மனிதனின் உணர்சிகள் மிகவும் முக்கியமான ஒன்று. அவை உங்களின் செயல்களை பாதிக்க கூடும். எனவே ஒவ்வொரு நாளும் அதற்காக சற்று நேரம் ஒதுக்கி உங்களின் உணர்சிகள் என்ன சொல்ல முயல்கின்றன என்பதனை கவனியுங்கள். இந்த உணர்சிகள் உங்களின் முக்கியமான வாழ்கையின் தேவைகளையோ அல்லது தேவையற்றவற்றயோ சுட்டி காட்ட கூடும். அவற்றை கூர்ந்து கவனியுங்கள்.

  5. மனதுடன் இணைதல்

    இது விளக்குவதற்கு சற்று கடினமான விடயமானாலும் மிகவும் முக்கியமானதொன்றகும். தினந்தோறும் எழுத்து குறிப்பு எடுப்பதினால் உங்களின் மனதோடு இணைந்து அதன் ஏற்றத் தாழ்வுகளை கண்காணிக்க உதவும்.

  6. கற்றவற்றை எழுதல்

    நீங்கள் கற்றுக்கொண்ட விஷயத்தை எழுதுவதால் அது உங்களின் ஆழ் மனதில் பதிய மிகுந்த வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் என்னெவெல்லாம் கடந்த சில தினங்களில் கற்றீர்களோ அவற்றை எழுதுங்கள். இவ்வாறு எழுதுவது நீங்கள் கட்ற்றவற்றில் இருந்து உங்களுக்கு நல்ல பயன்களை தரும். மேலும் நீங்கள் அதனை மற்றொரு முறை கற்றுக்கொள்ள அவசியம் இருக்காது.

  7. உங்களுள் தோன்றும் கேள்விகளை கேட்டல்

    குறிப்பெடுப்பது நீங்கள் ஏற்கனவே கற்றவற்றை எழுதுவதற்காக மட்டுமல்ல. நீங்கள் உங்களுள் தோன்றும் முக்கியமான கேள்விகளை அப்படியே எழுதுங்கள். நீங்கள் எந்த அளவிற்கு தரமான, வலிமையான கேள்விகளை எழுப்புகிரீர்களோ – உங்களால் அந்த அளவிற்கு தரமான பதில்களை உங்களாலே பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். எனவே இந்த குறிப்பேட்டில் உங்களின் அன்றைய தினதின் முக்கியமான கேள்விகளை குறித்துக்கொள்ளுங்கள்

இந்த ஏழு நன்மையான விளைவுகளை நான் என்னுடைய குறிப்பெடுக்கும் பழக்கத்தினால் உணர்கிறேன். இது சுய முன்னேற்ற பயிற்சிகளில் மிகவும் முக்கியமனதொன்று என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

குறிப்பெடுத்தலுக்கு சிறந்த ஊடகம் அல்லது கருவி எது?

இது முற்று முழுதாக உங்கள் தனி விருப்பதிட்குரிய ஒரு விடயம். ஒரு நாட்குறிப்பேட்டையோ (diary), விசேடமாக தயாரிக்கப்பட குறிப்பேடுகளையோ அல்லது ஓர் சாதாரண பாடசாலை பயிற்சிப் புத்தகத்தையோ (exercise book) பயன்படுத்தலாம். நீங்கள் அதிகம் கணனியுடன் தொடர்புடையவர் என்றால் குறிப்பெலுதவென்றே விசேடமாக தயாரிக்கப்பட்டுள்ள மென்பொருட்களைப் பயன்படுத்தலாம்.

தனிப்பட முறையில் நான் காகிதம் – மென்பொருள் என இரண்டு ஊடகங்களையும் பயன்படுத்துகின்றேன். அதிகமான சந்தர்பங்களில் நான் Day One என்கிற மென்பொருளையே பயன்படுத்துகிறேன். கணணி, கையடக்கத் தொலைபேசி, மற்றும் iPad போன்ற எல்லா தளங்களிலும் ஒத்திசைந்து (sync) செயற்படுதல் இம்மென்பொருளின் சிறப்பம்சமாகும். இது குறிப்பெடுத்தலை ஒரு நாளும் தவறவிடாமல் தொடர்ச்சியாக செய்து கொண்டு செல்ல பேருதவியாய் இருக்கின்றது. இது தவிர நீங்கள் Microsoft Word போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம்.

புதிய திட்டங்களை கிறுக்கும் போதும், mind mapping பண்ணும் போதும், கணணி முன்னமர்த்து அலுப்படைந்த நேரங்களிலும் நான் காகித குறிப்பேட்டை பயன்படுத்துகிறேன்.

உண்மையில் ஊடகமோ, கருவியோ குறிப்பெடுத்தலில் முக்கியத்துவம் பெறுவதில்லை. நீங்கள் எந்த அளவிற்கு சுய பிரதிபலிப்பை செய்கின்றீகள் என்பது தான் குறிப்பெடுத்தலின் அடிப்படை அம்சமாகும்.

நீங்களும் குறிப்பெழுதும் பழக்கம் உள்ளவரா? அவ்வாறெனில் நீங்கள் உணர்ந்த நன்மையான விடயங்களை எம்முடன் பகிந்து கொள்ள கீழே கமெண்ட் செய்யுங்கள்.

அல்லது நீங்கள் குறிப்பெடுக்கும் பழக்கத்தை ஆரம்பிக்கப் போகின்றீர்களா? இது குறித்து உங்களுக்கு எதாவது கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் அல்லது வழிகாட்டல்கள் தேவைப்படின் கீழே கமெண்ட் செய்ய மறவாதீர்கள். உங்கள் கேள்விகளுக்கு தனிப்பட்ட முறையில் பதிலளிக்க ஆவலாயுள்ளேன்.